வெற்றிகரமாக வியூகம் வகுத்த எடப்பாடியார்.. 15 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல்.. தொண்டர்கள் ஆரவாரம்.
அதேபோல் கட்சியின் வேட்பாளர்களை அறிவிப்பதில் சிறுசிறு மோதல்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்து வெற்றிகரமாக அதிமுக-பாஜக -பாமக கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 15ஆம் தேதி எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வராக பொறுப்பேற்று அதிமுக அரசை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில், அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருந்த பாஜக உடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலை சந்திக்க உள்ளார். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து ஓரளவுக்கு கூட்டணி வியூகத்தை வெற்றிகரமாகவே நிறைவு செய்துள்ளார் அவர்.
ஆனால் தேமுதிகவின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது எடப்பாடியாரின் அரசியல் வியூக்தில் ஏற்பட்ட பலவீனமாகவே கருதப்படுகிறது. ஆனாலும்கூட 15க்கும் மேற்பட்ட சிறு சிறு இயக்கங்கள், கட்சிகளின் ஆதரவை பெற்று தனக்கான கூட்டணி வலிமையை பன் மடங்கு உயர்த்தியுள்ளார். அதேபோல் கட்சியின் வேட்பாளர்களை அறிவிப்பதில் சிறுசிறு மோதல்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்து வெற்றிகரமாக அதிமுக-பாஜக -பாமக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை அவர் வரும் 15ஆம் தேதி எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் 15ஆம் தேதி மற்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி சட்டமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்பு மனு மீதான பரிசீலனை 20ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெற 24ஆம் தேதி கடைசி நாள் எனவும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.