நீட் வர காரணமானவர் எடப்பாடியார்.. இப்போது மாணவர்கள் மீது அக்கறை இருப்பது போல் நடிக்கிறார்.. மா.சு கடும் தாக்கு
நீட் தேர்வை பொறுத்தவரை 2011ல் கலைஞர் அதை ஏற்காமல் தடுத்த பெருமை கலைஞரை சாரும். அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை கூட அனுமதிக்கவில்லை. எப்போது பழனிச்சாமி வந்தாரோ அப்போது தான் நீட் வந்தது. இவரால் தான் நீட் வந்தது.
தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு, இலக்கு. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2010ம் ஆண்டில் திமுக கூட்டணி ஆட்சியின்போது தான் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என்று கேள்வி எழுப்பி இருந்த அவர், மாணவர்கள் மத்தியில் இருக்கும் குழப்பத்தைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- நீட் தேர்வை பொறுத்தவரை 2011ல் கலைஞர் அதை ஏற்காமல் தடுத்த பெருமை கலைஞரை சாரும். அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை கூட அனுமதிக்கவில்லை. எப்போது பழனிச்சாமி வந்தாரோ அப்போது தான் நீட் வந்தது. இவரால் தான் நீட் வந்தது.
மாணவர்கள் மீது அக்கறை உள்ளது போல் பேசுகிறார் பழனிச்சாமி. இன்றைய தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்காக உள்ஒதுக்கீடு வலியுறுத்தி பெற்றார். நீட் தேவையில்லை என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு தாக்கத்தைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தமிழகத்துக்குச் சாதகமான முறையில் பரிசீலிக்கும் வகையில் இருக்கும்.
ஒருவேளை நீட் தேர்வு நடத்தப்படும் சூழல் வந்துவிட்டால் மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாகத் தயாராக வேண்டும். இதற்கான பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு, இலக்கு. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.