எடப்பாடியண்ணே! நீங்க ரொம்ப தெளிவு.... நாங்கதான் உங்கள புரிஞ்சுக்கல !! விவசாயிகள் அதிர்ச்சி !!
தமிழகத்தில் இ.பி.எஸ். ஆட்சிக்கு எந்த பாதிப்பும் நேராது. அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். ஸ்டாலின் தப்புக் கணக்கு போடுகிறார்: தமிழிசை
(அக்கா, அவ்வளவு நம்பிக்கை அ.தி.மு.க. கூட்டணி மேலே இருந்தால், எதுக்குங்கக்கா ‘ஸ்டாலின் எங்களோடு கூட்டணி பேசுறார்’ன்னு காங்கிரஸ் கூட்டணிக்குள்ளே குண்டை எறியணும் நீங்க? அவரை அழுங்காம இங்கே இழுக்கத்தானே?)
எல்லா கருத்துக்கணிப்புகளும் மத்தியில் பி.ஜே.பி. அரசு அமையும் என சொல்லியுள்ளது. இது நிச்சயம் நடக்கும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த கருத்துக் கணிப்பில் மாறுபாடு சற்று வரும். தி.மு.க. பெருமைப்படும் வகையில் எதுவும் நடக்காது: இல.கணேசன்.
(அதென்னங்க பெரியவரே, உங்களை ‘நல்லவர்’ன்னு சொன்னா சந்தோஷப்படுறது, அடுத்தவனை ‘நல்லவர்’ன்னு சொன்னால் மட்டும் மறுக்குறது! இத்தன வருஷமா பாலிடிக்ஸ்ல நீங்க கத்துக்கிட்ட பக்குவம் இவ்வளவுதானா?)
* ஆளும் அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தால், அது எப்படி இருக்கும் என்பதை கடந்த தேர்தல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தத் தேர்தல்களில் ஆளும் அரசுகள் மீது மக்களுக்கு அப்படி எந்த கோபமும் இல்லை: வைகை செல்வம்.
(எப்படிண்ணே, ஜெயலலிதா உங்க மேலே செம்ம கோபமாகி, அமைச்சர் பதவியில இருந்து சொற்ப காலத்துல உங்களை தூக்கி வீசினாங்களே! அந்த மாதிரியான கோபமாண்ணே?)
* தமிழகத்தில் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக சொல்லப்படுகிறது. லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தி.மு.க. அணிக்கு சாதகமாகவே அமையும்: திருமாவளவன்.
(தலைவரே, எல்லாத்தையும் வழக்கம்போல ஓப்புவிச்சீங்க, ஓ.கே. ஆனால் ‘தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவோம்’ அப்படிங்கிற வரியை மறந்துட்டீங்க.
* எட்டு வழிச்சாலை என்பது மிகவும் அவசியம். அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ப சாலை வசதிகளை அமைக்க வேண்டும். விவசாயிகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி .
(அண்ணே, தேர்தல் பிரசாரத்துல ‘இந்த எட்டுவழிச்சாலையானது மத்திய அரசின் திட்டம்.’ அப்படின்னு பிரச்னையை அவங்க தலைமேலே தூக்கி வெச்சீங்க. இப்ப ரிசல்ட் கூட வரலை அதுக்குள்ளே பிளேட்டை மாத்திப் போடுறீங்க. நீங்க தெளிவு, நாங்க லூசாண்ணே?)