ஜெயித்தது அவங்க இல்ல, நான்! மு.க ஸ்டாலினை வைத்தே மொத்த தடையையும் முறியடித்த எடப்பாடி!
மெரினாவில் கலைஞர் சமாதி, ஜெயித்தது முக ஸ்டாலின் அல்ல! ஜெயித்தது நாமதான், என தீர்ப்பால் சந்தோஷப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
80 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலில் சாணக்கியனாக விளங்கியவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது பூத உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலைஞரின் உயிரினும் மேலான பாசமிகு அண்ணன் அறிஞர் அண்ணாவின் உடல் இருக்கும் மெரினாவில் தான் தன்னுடைய உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனும் கலைஞரின் எண்ணம் இதன் மூலம் நிறைவேறியது. ஆனால் இந்த விஷயம் ஒன்றும் சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. முதலில் மெரினாவில் கலைஞருக்கு இடம் தர சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்து, மெரினாவில் இடமளிக்க மறுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கிண்டியில் காமராஜர் உடல் அருகே கலைஞருக்கு நல்லடக்கம் நடைபெற அனுமதி அளித்த அவர், பல பேர் வேண்டி கேட்டும் மெரினாவில் இடம் தர அனுமதி அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து மிகப்பெரிய போராட்டமே நடைபெற்றது. கடைசியில் கலைஞருக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டு வாதாடி மெரினாவில் இடம் கிடைத்தது. இந்த வழக்கில் கலைஞருக்கு வெற்றி கிடைத்ததும் அங்கிருந்த ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினருமே உணர்சிபெருக்கால் அழுதுவிட்டனர்.
பின்னர் கலைஞர் மரணத்தின் பிறகும் போராடி பெற்ற இந்த வெற்றியை கொண்டாடி அவருக்கு சகல மரியாதையுடனும் நல்லடக்கம் செய்து வைத்தனர் அவரது தொண்டர்களும் குடும்பத்தினரும்.
இந்த வழக்கில் கலைஞர் வெற்றி பெற்றதை அறிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக இப்போது சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உண்மையில் எடப்பாடி மகிழ்ச்சி அடைந்தார் என்பதை சில முக்கிய அதிமுக புள்ளிகளே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதி அமைந்த பிறகு சில வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவரது சமாதி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என தொடரப்பட்ட அந்த வழக்குகளால் பல தடைகள் இருந்ததாகவும், இப்போது அந்த வழக்குகளை கருணாநிதிக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து இனி அம்மா சமாதிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என கூறி அவர் மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இது உண்மையில் நம் அம்மாவிற்கு கிடைத்த வெற்றி என கூறி எடப்பாடி சந்தோஷப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.