துர்காவே எங்க கையில் இருக்காங்க.. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அட்ராசிட்டி.. குமுறும் வ.கவுதமன்.
தீட்சிதர்களின் அட்ராசிட்டியை தட்டி கேட்பவர்களிடம், எங்கள் கையில் துர்காவே இருக்கிறார்கள் என்று மிரட்டுகிறார்கள். துர்கா என்பது முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய மனைவியை தான் அவர்கள் சொல்கிறார்கள்.
தமிழர்களையும், கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களையும் அடித்து அவமானப்படுத்துகிற தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலை தமிழக அரசு மீட்க வேண்டும் என இயக்குனர் வ.கௌதமன் கோரிக்கை வைத்துள்ளார். அவர்களின் அராஜகத்தை தட்டிக் கேட்பவர்களை துர்காவை எங்கள் கையில் இருக்கிறார் என கூறி அவர்கள் மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். பழங்குடியின சமூகத்தின் அவலங்களையும், காவல்துறை வெறியாட்டத்திற்கு அந்த மக்கள் இரையாக்க படுவதையும் தத்துரூபமாக காட்சிப்படுத்தி உள்ளது இந்த படம். சாதி, மதம்,மொழி கடந்து பல்வேறு நாடுகளிலும் இந்த படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹாலிவுட் படத்தையே பின்னுக்கு தள்ளி அதிக பார்வையாளர்கள் கொண்ட படமாக உருவெடுத்துள்ளது ஜெய் பீம்.
ஒட்டுமொத்த தேசமும் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், தங்கள் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசத்தை தவறாக பயன்படுத்தி விட்டதாகவும், இதனால் தங்கள் சமுதாய மக்கள் காயப்பட்டுள்ளதாகவும், எனவே நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் சூர்யாவை கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் இயக்குனர் கவுதமன் தொடர்ந்து பேசிவருகிறார். இரண்டு தமிழ் குடிகளுக்கு இடையிலே பகையை உருவாக்கும் நோக்கத்தில் அந்த குறிப்பிட்ட காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கு சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் எவனாக இருந்தாலும் அது எமனாக இருந்தாலும் விடமாட்டேன் என தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ள நிலையிலும் இந்த விவகாரம் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் வ.கௌதமன் நேற்று திடீரென கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தார். தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர். கூறியதாவது, சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து தமிழர்களையும் அங்கு செல்லும் பெண்களையும் அடித்து அவமானப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலை சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த கோயிலில் அவர்கள் என்ன மாதிரியான அராஜகம் செய்து வருகிறார்கள் என்பதை வரிசைப்படுத்தி மனு கொடுத்துள்ளோம், கடந்த 2000மாவது ஆண்டு தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என்றும் தமிழர் உரிமையை நிலைநாட்ட சென்றார் ஆறுமுகசாமி ஐயா அவர்களை இழுத்து கீழே தள்ளி தாக்கி அராஜகம் செய்தனர்.
இப்போது கூட பெண்கள் சென்றால் அவர்களை அடித்து அவமானம் செய்கின்றனர். ஆண்கள் சென்றால் அவர்களை வேறு மாதிரி நடத்துகின்றனர். சிதம்பர ரகசியத்தை காட்டி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அது காட்டப்படவில்லை, இப்போது நடராஜர் சாமி அங்கு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்துள்ளது. திருச்சிற்றம்பல மேடையில் தமிழர்களை ஏற்றி இரண்டு ஆண்டுகள் ஆகிறது, அதேபோல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதனால் மட்டுமே நந்தனார் நடந்து வந்த பாதையான தெற்கு வாசலை அடைத்து தீண்டாமைச் சுவர் எழுப்பி வைத்திருக்கிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோயிலிலேயே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது என்றால், அதை அவர்கள் இடக்கிறார்களா? அரசாங்கம் அகற்றுமா அல்லது நாங்களே அகற்ற வேண்டுமா என்பதே அரஞாங்கம் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் அரசை நம்புகிறோம், இன்று நாங்கள் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தோம், திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தமிழர் உரிமையை நிலைநாட்டுவதென முடிவு செய்திருந்தோம். ஆனால் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதை கைவிட்டுள்ளோம்.
தீட்சிதர்களின் அட்ராசிட்டியை தட்டி கேட்பவர்களிடம், எங்கள் கையில் துர்காவே இருக்கிறார்கள் என்று மிரட்டுகிறார்கள். துர்கா என்பது முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய மனைவியை தான் அவர்கள் சொல்கிறார்கள். திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்று இவர்கள் யாகம் செய்கிறார்கள் என்பது அவருக்கு தெரியாது ஒன்றுமில்லை. ஆனால் எங்கள் கையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் அரசாங்கத்தை யார் நடத்துவது, யார் யாருக்காக மிரட்டுவது, இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம், இல்லை என்றால் நாங்கள் பல போராட்டங்களை பார்த்தவர்கள், அதுபோன்ற போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் இவ்வாறு அவர் எச்சரித்தார்.