மாநில அரசுகள் சம்பளம் கொடுக்கும் ஓர் ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்? இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை. 

தன்னுடைய பதவியும், தன்னுடையன் அரசும் நிலைத்தால் போதும் என்று காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு சாமரம் வீச வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.


இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஒரு நிர்வாக நடைமுறை தொடர்பான நடவடிக்கை” என்றும், “விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்றும் பூசி மெழுகி, பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம். பல ஆண்டுகாலமாக பல்வேறு வழக்குகள் மற்றும் பல்வேறு தடைகளைக் கடந்து, கிடைக்கவே கிடைக்காது என்று நம்முடைய எதிரிகள் சொல்லிக் கொண்டிருந்தபோது, படாதபாடுபட்டு காவிரி வழக்கில் இறுதி வெற்றி பெற்று, ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைப்பதற்கு வழிவகுத்தவர், தலைவர் கலைஞர்.


“கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் சேர்த்துதான் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று, பொதுப்பணித்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். பாவம். அவர், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த காவிரி இறுதித் தீரப்பைக் கூட படித்துப் பார்க்கவில்லை போலும். மத்திய அரசின் வழக்கறிஞர், “கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில், நடுவர் மன்ற உத்தரவுகளை நிறைவேற்றத் திட்டம் (Scheme) ஏதும் தயாரிக்கப்படவில்லை. காவிரி நதிநீர் நடுவர் மன்றத் தீர்ப்பில் மட்டுமே இப்படியொரு ஸ்கீம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று வாதாடி, மேற்கண்ட 16.2.2018 தீர்ப்பிலேயே, அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே கோதாவரி, கிருஷ்ணா வாரியங்கள் வேறு; காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்பது வேறு.
நம் ஆணையம் முழுக்க முழுக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்கீமின் அடிப்படையில் செயல்படும் ஆணையம்! இந்த அடிப்படை கூட பொதுப்பணித்துறையின் செயலாளருக்கே தெரியவில்லை. இந்த லட்சணத்தில்தான் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது! “அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் கொண்டு வரப்பட்டது முற்றிலும் நிர்வாக நடவடிக்கை” என்றும், “இதர நிர்வாகங்களை மேற்கொள்ள, இது ஒரு வழக்கமான நடைமுறை” என்றும் முதன்மைச் செயலாளர் கூறியிருக்கிறார். அவருக்காக நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக இருப்பவர், 18.5.2018 தேதியன்று வெளியிடப்பட்டுள்ள “காவிரி நீர் மேலாண்மைத் திட்டம்-2018” மற்றும் 1.6.2018 அன்று அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்த எந்த உத்தரவுகளையும் படிக்கவில்லை என்றே தெரிகிறது.
உச்சநீதிமன்றம் அங்கீகரித்து - மத்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட ,“காவிரி நீர் மேலாண்மைத் திட்டம்-2018”ல் உள்ள பிரிவு 5(a)-ல் “ஆணையத்தின் நடைமுறைகள் (Business) குறித்த விதிமுறைகளை ஆணையமே உருவாக்கும்” என்றும், “ஆணைய உறுப்பினர்கள், செயலாளர், மற்ற அதிகாரிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது”, “ஆணையத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்திக் கொள்வது போன்றவற்றையும் ஆணையமே செய்து கொள்ளும்” என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 5(c)-ல்," The Authority shall frame its own rules for the conduct of its business” என்று தெளிவாகவே உள்ளது. பிரிவு 7-ல், “ஆணையத்திற்குத் தேவையான அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை ஆணையமே நியமிக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.
முதன்மைச் செயலாளர் இன்னொரு அபத்தமான விளக்கத்தை அறிக்கை வாயிலாக அளித்துள்ளார். “ஆணையத்தின் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது தொடர்பான நடைமுறைக்காகவே, ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று, வடிகட்டிய பொய்யைக் கூறியிருக்கிறார். காவிரி திட்டப் பிரிவு 8(1)ல், ஆணையத்தின் சம்பளம் பற்றி விளக்கி, “கேரளா 15 சதவீதம், கர்நாடகா 40 சதவீதம், தமிழ்நாடு 40 சதவீதம், பாண்டிச்சேரி 5 சதவீதம் என்ற அடிப்படையில் ஆணையத் தலைவரின் சம்பளம் உள்பட ஆணையத்தின் அனைத்துச் செலவுகளையும் நதிநீர் பகிர்வு உரிமையுள்ள நான்கு மாநிலங்களும் கொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் சம்பளம் கொடுக்கும் ஓர் ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்? இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
“காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” என்று பெயரளவிற்கு ஒரு அறிவிப்புச் செய்த அ.தி.மு.க. அரசு, அமைதியாகவும், ரகசியமாகவும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிற்குத் தாரை வார்த்திருக்கிறது. இது காவிரி டெல்டா பகுதிகளை, சகாராப் பாலைவனமாக்கும் உள்நோக்கத்தின் வெளிப்பாடே! ஆகவே எங்கள் கழகத் தலைவர் கேட்டிருப்பது போல், மத்திய அரசின் இந்த முடிவை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் - காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், தனது பதவியும் - தன் அரசும் நிலைத்தால் போதும் என்று, காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்” என்று அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.