“ரஜினி கட்சிக்கு ஆள் சேர்க்கிற வேலை பார்க்கிறார் ரஞ்சித்” விடுதலை சிறுத்தை கட்சி காட்டம்...
தலித் இளைஞர்களை ரஜினிகாந்த் கட்சிக்கான தொண்டர்களாக மாற்றுவதற்குத்தான் பயன்படும்" என கோபமாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் டீசரை நேற்று நள்ளிரவு நடிகர் தனுஷ் வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள டீசரில், ரஜினிகாந்த் கருப்புச் சட்டையுடன் முதல்முறையாக திருநெல்வேலி பாஷை பேசி நடித்துள்ளனர். டீசரின் முடிவில் ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்(Organize, make change, revolte), ”கற்றதை பற்றவை” (educate, agitate) என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் வரிகள் அம்பேத்கரின் முழக்கமான educate, Organize, agitate (கற்பி,ஒன்றுசேர், புரட்சி செய்)என்பதைக் குறிப்பிடுகிறது.
இந்நிலையில், டீசர் குறித்து நேற்று தந்தி தொலைக்காட்சியில் பேசிய விசிக பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார், "ரஜினிகாந்த் அவர்கள் தமிழில் இருக்கக்கூடிய மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். மிக நுட்பமாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர். அதனை நாம் பல திரைப்படங்களில் பார்த்துள்ளோம். ஆனால் ரஞ்சித், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து ஒரு மோசமான வணிக சினிமாவை அதுவும் கேங்ஸ்டர் சினிமாவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான ஒரு விஷயம்.
இன்னும், சில மாதங்களில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிக்கு இதுமாதிரியான திரைப்படங்கள் மூலம் அவருக்கு வலுவைச் சேர்ப்பது. அம்பேத்கர் முழக்கங்களை அவருடையை திரைப்படங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவது என்பது, சினிமாவால் ஈர்க்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களை ரஜினிகாந்த் கட்சிக்கான தொண்டர்களாக மாற்றுவதற்குத்தான் பயன்படும்" என கோபமாக வெளிபடுத்தினார். "ரஞ்சித் அவர்கள் ஒரு இயக்குனராக இருந்து திரைப்படத்தின் வெற்றிக்காக பயன்படப் போவதைக் காட்டிலும், ரஜினிகாந்த் கட்சிக்கு ஆள் சேர்க்கிற பணிக்கு பயன்படப் போகிறாரா என்பதுதான் நமது கேள்வியாக இருக்கிறது. இதனை நான் வரவேற்கத்தக்க ஒன்றாகக் கருதவில்லை" என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் "அம்பேத்கரின் அரசியல் முழக்கம் வணிக சினிமா ஒன்றின் பிரச்சார வாசகமாக்கப்பட்டிருக்கிறது. கொடுமை!" என ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்