திமுக வேட்பாளருக்கு அழகிரி மகன் கடும் எதிர்ப்பு..... 'காசு பணம் மணி துட்டு'ன்னு கிண்டல்...
சில வருடங்களுக்கு முன்பு தென் மண்டல திமுகவை ஆட்டி படைத்தவர்கள் மு.க.அழகிரியும் அவரது மகனும் ...
இன்றோ ஒரு வார்டு கவுன்சிலரை பரிந்துரைக்க கூட முடியாத நிலையில் உள்ளனர்.
அழகிரியின் ஒட்டுமொத்த தென்மண்டல சாம்ராஜ்யத்தையும் மு.க.ஸ்டாலின் கபளீகரம் செய்ததே இதற்கு காரணம்..
சும்மா விடுவார்கள் அழகிரியும் அவரது மகனும்..???
பிரிவு ஏற்பட்ட காலம் முதலே தொடர்ந்து திமுக தலைமைக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எதிராக அழகிரி கருத்து தெரிவித்து வந்தார். அப்போதெல்லாம் அடக்கி வாசித்த அழகிரி மகனான துரை தயாநிதி தற்போது தனது தந்தையை போல அதிரடியாகவும் வெளிப்படையாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.
திமுகவுக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தோடு அதிமுகவுடன் மல்லுக்கட்ட ஸ்டாலின் தலைமையில் களமிறங்கியுள்ள நிலையில் கருணாநிதி குடும்பத்து வாரிசான துரை தயாநிதி பல அதிர்ச்சி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைதேர்தல் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டதற்கு வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் துரை தயாநிதி.
டாக்டர் சரவணன் பெயரை குறிப்பிட்டு "திமுகவில் போட்டியிட வேற ஆளே கெடைக்கலையா?' என்றும் 'காசு பணம் மணி துட்டு' என்றும் எகத்தாளமாக கிண்டல் அடித்துள்ளார்.
மு.க.அழகிரியின் மகன் டுவிட்டரில் இப்படி வெளிப்படையாக திமுக தலைமைக்கும் வேட்பாளருக்கும் எதிராக கருத்து தெரிவித்திருப்பதால் மதுரை மாவட்ட திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.