பின்னணி பாடகர் எஸ்.பி. பால சுப்பிரமணியத்தின் மறைவு அனைத்து மொழி திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், “இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.


இளம் வயதிலேயே இசைத்துறையில் அடியெடுத்து வைத்த பாலசுப்பிரமணியன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் கூடுதலான பாடல்களை பாடியவர். இசையமைப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர் என பல அவதாரங்களை எடுத்தவர். தமது தேன் கலந்த குரலால் திரைப்பட பாடல்களுக்கு கூடுதல் இனிமையும், சுவையும் சேர்த்தவர். இசை உலகில் அவர் படைத்த சாதனைகளை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எவராலும் முறியடிக்க முடியாது.