பா.ரஞ்சித் படத்தைப் பார்க்காதீங்க ! எச்,ராஜா அதிரடி பேச்சு !!
மதம் மாற்றும் தீயசக்திகளின் கையாளாக பா.ரஞ்சித் செயல்படுகிறார் என்றும் அவர் இயக்கும் படங்களை பொதுமக்கள் பார்க்காமல் புறக்கணித்து அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தயாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது.
காங்கிரஸ், தி.மு.க. கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. இது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது. வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
புதிய கல்விக்கொள்கை குறித்து பலர் உள் நோக்கத்துடன் பேசுகின்றனர். மலைவாழ் மக்கள், கிராம பகுதிகளில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையில் முழுக்க முழுக்க கிராம மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறினார்.
ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. எப்படியாவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு பேசி வருகிறார்.
ஒருசில மதம் மாற்றும் தீயசக்திகளின் கையாளாக பா.ரஞ்சித் செயல்படுகிறார் என்ற சந்தேகம் தற்போது ஏற்படுகிறது. இது உள்நோக்கம் கொண்ட பொய். பா.ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் பார்க்காமல் புறக்கணித்து அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எச்.ராஜா கூறினார்..