டி.டி.வி.தினகரனின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை… துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவிப்பு….
மதுரை மேலூரில் டி.டி.வி.தினகரன் இன்று நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். தான் டெல்லி செல்லவுள்ளதால் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்றும் அ.தி.மு.க.வில் உள்ள அனைவருமே சின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.
அதிமுகவை, பாஜக உட்பட எந்த கட்சியாலும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அ.தி.மு.க. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கட்சி. அதை எவராலும் கலைக்க முடியாது என தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரன் இன்று மதுரை மாவட்டம் மேலூரில் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பீர்களா?’ என்று செய்தியாளர்களுக்கு கேள்வி எழுப்பியபோது, தான் டெல்லி செல்வதாகவும் இதனால் எந்த கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.