திரும்பவும் பசி, பட்டினியில் தள்ளாதீர்கள்.. தலைமைச் செயலகத்தில் கதறிய முடித்திருத்துவோர் நல சங்கம்.
யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல அரசு அறிவித்த நிவாரண தொகை இரண்டாயிரம் ரூபாயும், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. இதனால் முடி திருத்துவோர் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி சிகை அலங்கரிப்போர் நலச்சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு அளித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளில், சலூன் கடைகளை அடைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டபோது சலூன் கடைகள் அடைக்கப்பட்டதால் ஆறு மாத காலம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டனர். வாழ்வாதாரம் இழந்து பசி பட்டினியோடு சிரமத்திற்கு ஆளாகினர். அதில் சிலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தேறியது.
யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல அரசு அறிவித்த நிவாரண தொகை இரண்டாயிரம் ரூபாயும், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. இதனால் முடி திருத்துவோர் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சலூன் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சிகை அலங்கரிப்போர் நலச்சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு அளித்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், வருவாய் துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர்,சலூன் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது எனவும், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.