Do not pay salaries to the collector ... High Court action!
மூதாட்டி ஒருவரின் நிலத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து அதற்கான வாடகை அளிக்காத புகாரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட மூவருக்கு இம்மாத சம்பளம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
ஃபரிதா சவுகத் என்ற 69 வயது மூதாட்டிக்கு சொந்தமான இடம் மாதவரத்தில் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு அந்த இடத்தில் வருவாய் துறையினர் வட்டாச்சியர் அலுவலகம் அமைத்திருக்கிறார்கள்.
ஆனால் உரிமையாளரான ஃபரிதா சவுகத்திடம் வாடகை ஒப்பந்தம் போடாமல் வருவாய்த்துறை காலம் தாழ்த்தியுள்ளனர். அலுவலகத்துக்கான மாத வாடகையையும் ஃபரிதாவிடம் வழங்கவில்லை.
இதுதொடர்பான புகார் மனு ஒன்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் ஃபரிதா வழங்கியுள்ளார். ஆனால் அந்த மனுவை கண்டுகொள்ளாத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது கட்டிடத்தை வருவாய்த்துறை அலுவலகமாக வாடகை தராமல் பயன்படுத்துவதாகவும் வாடகைக்காக தன்னை அலைக்கழிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஃபரிதாவின் இடத்தை வாடகை ஒப்பந்தம் போடாமல் பயன்படுத்தியதோடு அவருக்கு வாடகை தராமல் அதிகாரிகள் அலைக்கழித்துள்ளார்கள் என தெரிவித்தார்.
எனவே 35 நாட்களுக்குள் வாடகை ஒப்பந்தம் போட வேண்டும். 30 நாட்களுக்குள் நிலுவை வாடகை தொகையை வழங்க வேண்டும். அதுவரை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர், வட்டாட்சியர் ஆகிய மூவருக்கும் சம்பளம் வழங்க தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.
