மோடியை யாரும் விமர்சிக்காதீங்க..! கரிசனம் காட்டும் ராகுல்..!
பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குஜராத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களையும் மத்தியில் பாஜக அரசின் செயல்பாடுகளையும் விவரித்து பாஜகவும், பாஜகவை விமர்சித்து காங்கிரஸும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
குஜராத்தில் உள்ள அக்ஷர்தம் கோயிலுக்கு சென்றுவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. படேல் சமூகத்தினரில் வாக்குகளைப் பெறுவதற்காகவே படேல் சமூகத்தினர் அதிகமாக வழிபடும் அக்ஷர்தம் கோயிலுக்கு ராகுல் சென்றதாக பாஜக விமர்சித்தது. அதற்கு காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் இன்றும் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்துவருகிறார். பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சுவிஸ் வங்கியில் பணம் சேர்த்த யாரும் இதுவரை சிறை செல்லவில்லை. குஜராத்தில் 90% கல்லூரிகளை பணக்கார முதலாளிகள் தான் நடத்துகின்றனர் என குற்றம்சாட்டினார்.
மேலும் திட்டங்கள் சார்ந்தும் கொள்கைகள் சார்ந்தும் விமர்சிக்கலாமே தவிர பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாகரீகமான நெறிசார்ந்த அரசியலை முன்னெடுக்கும் வகையில், ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.