அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இன்று மதுரை வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதியில் விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு குறித்த பட்டியல் நாளை வெளியிடப்படும். இவர்கள் தி.மு.க. தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று தெரிவித்த அவர், 3 தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.
