வருகின்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிப் பெறும்; மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் - கீ.வீரமணி ஆருடம்...
நாகப்பட்டினம்
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிப் பெறும் என்றும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும் நாகப்பட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் திமுக-வின் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தராசன், இல.மேகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரியசார்லஸ், ஊராட்சி அவைத் தலைவர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட பிரதிநிதி இல.பழனியப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. நாகப்பட்டினம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்தக் கூட்டத்தில் கி.வீரமணி பேசியது: "பெரியார் இறந்தபோது கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அப்போது கருணாநிதி, தலைமைச் செயலாளரை அழைத்து பெரியார் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
"பெரியார் ஆட்சியில், பதவியில் இல்லை. எனவே, அவருக்கு அரசு மரியாதை கொடுத்தால் ஆட்சிக்கு இடையூறு வரும்" என்று தலைமைச் செயலாளர் கூறினார்.
அதற்கு கருணாநிதி, "ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை அரசு மரியாதை கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்றார். இவ்வாறு கூறும் துணிச்சல் கருணாநிதி ஒருவருக்கு மட்டுமே உண்டு.
மேலும், "பெண்களுக்கு சொத்துக்களில் பங்கு உண்டு" என்று சட்டம் கொண்டுவந்தது தி.மு.க. ஆட்சியில்தான்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிப் பெறும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார்" என்று ஆருடன் தெரிவித்தார் கி.வீரமணி.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட அவைத் தலைவர் மீனாட்சிசுந்தரம், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், தி.மு.க.வைச் சேர்ந்த ராஜமூர்த்தி, நாகராஜன், சந்திரசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் மகா.குமார், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் நெப்போலியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.