”அதிகாரிகளுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்யுங்க” - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
ஓகி புயல் மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முதல் கன்னியாக்குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும் மின் ஒயர்கள் அறுந்தும் காணப்படுகின்றன.
இதனால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலன இடங்களில் தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது.
கன்னியாக்குமரிக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏராளமான கட்டடங்கள் மீது மரங்கள் விழுந்து இடிந்து விழுந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓகி புயல் மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் ஆங்காங்கு உள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.