எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் தி.மு.க... உங்க சலசலப்பு எங்ககிட்ட வேண்டாம்... அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு
அண்ணாமலை புதிதாக பா.ஜ.க வின் தலைவராகி இருக்கிறார். அதனால், அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இது போன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும்.
பா.ஜ.கவை இன்னொரு முறை, தயாநிதி மாறன் கொச்சைப்படுத்தினால், அவரைப்பற்றிய எல்லா விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும் என அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு, “17வார்டுகளில் 24/7 குடிநீர் வழங்கும் வகையில் 28.5 கோடி ரூபாய் செலவில் இந்த பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. விநியோகிக்க கூடிய தண்ணீர் கலங்கலாக இல்லாமல் சுத்தமான குடிநீராக வழங்கும் வகையில் புதிய இயந்திரம் 5 கோடி ரூபாய் செலவில் வைக்கப்பட உள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க தேவையான திட்டம் தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம். அங்கிருந்து போதுமான அளவு தண்ணீர் விநியோகிக்கும் வசதி உள்ளது. மக்கள் தொகை பெருகினாலும் அத்திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்க மேலும் பல வசதிகள் செய்து தரப்படும். அடுத்த ஓர் ஆண்டில் திருச்சி மாநகராட்சி மக்களுக்கு 24/7 என்கிற அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படும்.
ஏற்கனவே போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் சரி இல்லாத காரணத்தால் குடிநீரோடு சாக்கடை நீர் கலக்கிறது,அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கம்பரசம்பேட்டையில் குடிநீர் விநியோகிக்க பயன்படும் பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகள் சரி செய்யப்படும்.
தி.மு.க வினர் எதிர்ப்பை சமாளிக்கும் வலுவோடு தான் இருப்பார்கள். தி.மு.க சந்திக்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் தி.மு.க. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க வின் தலைவராகி இருக்கிறார். அதனால், அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இது போன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.