வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் மரியாதை… முதல் ஆளாக கமலாலயம் வந்து அஞ்சலி !!
சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்
முன்னாள் பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 17ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்படும் என பாஜக அறிவித்தது. இதையடுத்து, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர்களிடம் அஸ்தி கலசங்களை பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா ஆகியோர் வழங்கினார்.
தமிழகம் சார்பில் அஸ்தி கலசத்தை பெறுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னை கொண்டு வந்து பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று காலை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி கலசத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் படத்திற்கும் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடன் வந்திருந்தார்.
வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் சென்னை அடையாறு, ராமேஸ்வரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரை வைகை ஆறு, ஈரோடு பவானி ஆறு, திருச்சி காவிரி ஆறு ஆகிய இடங்களில் கரைக்கப்படுகிறது.