தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்துவிட்டு, தமிழ்நாட்டை ஆள நினைப்பதைப் போன்ற துரோகச் சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
வேலூரில் திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம் - 2021’ தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் நாம் முழுமையான வெற்றியை பெற்றாக வேண்டும். தமிழகத்தில் நடைபெற்றுவரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கத் தகுதி இல்லை. பழனிசாமி முதல்வராக இருக்க வேண்டும், அவருக்கு அந்தத் தகுதி இருக்கிறது என்று நினைத்து மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் அடைந்ததாலும் சசிகலா சிறைக்குப் போனதாலும் ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் போனதாலும் முதல்வர் ஆனவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஏறி வந்த ஏணியை எட்டி மிதித்துத் தள்ளுவதைப் போல சசிகலாவையே தூக்கி எறிந்த பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் மீது பற்றோ பாசமோ இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? காபி 'கப்'பைத் தூக்கிப் போடுவதைப் போல மக்களைத் தூக்கி எறியக் கூடியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதனை அவரது ஒவ்வொரு நடவடிக்கை மூலமாகவும் உணரலாம்!
தமிழ்நாட்டில் எந்தத் தரப்பு மக்களாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? தமிழ்நாட்டின் எந்த உரிமைக்காவது பழனிசாமி குரல் கொடுத்துள்ளாரா? தமிழ்நாட்டுக்கு எந்தச் சலுகையாவது வாங்கித் தந்தாரா? தமிழகத்துக்கு எந்தப் புதிய திட்டமாவது கொண்டு வந்தாரா? எதுவும் இல்லை. தமிழக ஆட்சி அதிகாரத்தை வைத்து தானும் செய்யவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியின் துணையை வைத்து அவர்களையும் செய்ய வைக்கவில்லை. மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குச் செய்த துரோகத்தை என்னால் வரிசையாகப் பட்டியலிட முடியும். இவை அனைத்தையும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. அதனால்தான் இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக் கூடாத ஆட்சி என்று சொன்னேன்.

