மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அதன் மூலமாக மக்கள் மனங்களை வெல்வதும்தான் உண்மையான வெற்றி; நிலைக்கும் வெற்றி. அதை உணராமல் அச்சுறுத்தலின் மூலமாக மத்திய, மாநில அரசுகளும் அதன் அரசியல் சக்திகளும் செயல்படுவார்களேயானால், மக்கள் மன்றத்தில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவார்கள் என்று எச்சரிக்கிறேன். எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடி வரும் அனைவர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அதிமுகவும், அதிமுக கூட்டணியில் உட்கார சீட் கிடைக்காமல் டயரில் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டு இருக்கும் பாமகவின் ஓர் உறுப்பினரும் ஆதரித்தனர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


சென்னை பெசன்ட் நகரில் நடந்த கோலப் போராட்டம் தொடர்பாகவும் அதனையடுத்து நடந்த விவாகரங்களை மையமாக வைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டும் ஸ்டாலின் சாடியிருந்தார். அறிக்கையின் ஒரு பகுதியில் பாமகவையும் விமர்சித்திருந்தார் ஸ்டாலின். “குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்களவையில் தாக்கல் ஆனபோது அதிமுகவின் ஓர் உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தார். மாநிலங்களவையில் தாக்கல் ஆனபோது அதிமுகவின் 11 உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் உட்கார சீட் கிடைக்காமல் டயரில் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டு இருக்கும் பாமகவின் ஓர் உறுப்பினரும் ஆதரித்து வாக்களித்தார்கள்.


இது அல்ல, உண்மையான, நேர்மையான அரசியல். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அதன் மூலமாக மக்கள் மனங்களை வெல்வதும்தான் உண்மையான வெற்றி; நிலைக்கும் வெற்றி. அதை உணராமல் அச்சுறுத்தலின் மூலமாக மத்திய, மாநில அரசுகளும் அதன் அரசியல் சக்திகளும் செயல்படுவார்களேயானால், மக்கள் மன்றத்தில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவார்கள் என்று எச்சரிக்கிறேன். எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடி வரும் அனைவர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.