நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான திருவாரூர் சிங்கத்தின் புகைப்படம்... தொண்டர்கள் உற்சாகம்!
உடன் பிறப்பே என்ற ஒரு வார்த்தையை அந்த உதடுகள் உச்சரிக்கும் போது, கிடைக்கும் தெம்பும், ஊற்றெடுக்கும் உற்சாகமும், அதை அனுபவித்த திமுக தொண்டனுக்குதான் தெரியும்.
சூரியன் கூட தாமதாக உதிக்கலாம், சில நேரங்களில் உதிக்காமலும் போகலாம், அனால் இந்த சூரியன் ஒரு நாளும் உதிக்காமல் இருந்ததே இல்லை.
முரசொலியில், அவரது தம்பி மார்களோடு அவர் என்றைக்குமே பேசாமல் இருந்ததில்லை. கரிகாலனாய் மாறி அவர், எந்த பிரச்சினையையும் விமர்சிக்காமல் விட்டு வைத்ததும் இல்லை.
ஒரே வார்த்தையில் சொன்னால், ஓய்வறியாத சூரியன் கலைஞர் கருணாநிதி. அரசியல், சினிமா, கலை, இலக்கியம் என அவர் தடம் பதிக்காத துறை தமிழகத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
எதிலும் சிங்கம் போல கர்ஜித்து வந்த, அந்த ஆரூர் ஈன்றெடுத்த அருந்தமிழ், முதுமை காரணமாக ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு சில மாதங்கள் ஆகிவிட்டன.
காவேரி மருத்துவமனை சென்று வந்தது முதல், அவர் முழுவதுமாக ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டார். அவரது உடல்நலம் கருதி, அவரை பார்ப்பதற்கு கட்சி தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதனால், கலைஞர் எப்படி இருக்கிறார்? என்றே தெரியாமல், தொண்டர்கள் அனைவரும் தவித்து வந்தனர். இந்நிலையில், கலைஞரின் புகைப்படம் நேற்று வெளியாகி உள்ளது.
தி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி, அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்த படங்களில் தமது தலைவனின் தரிசனத்தை திமுக தொண்டர்கள் பலர், உற்சாகத்தில் ஆனந்த கண்ணீரே வடித்து விட்டனர்.