100 ஆண்டு கால கோயிலை இடித்ததாக பேசினாரா டி.ஆர்.பாலு.? அண்ணாமலையின் வீடியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் திமுக
100 ஆண்டுகால கோயிலை தான் இடித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட நிலையில், இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என திமுகவினர் உண்மையான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை
திமுக- பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக அரசு தொடர்பாக பல்வேறு புகார்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினரும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடித்ததில் திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்த காரணத்திற்காக தான் இந்துசமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கத்தின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என அண்ணாமலை கூறியிருந்தார்.
100 வருட கோயிலை இடித்தேன்
மேலும் அந்த வீடியோ பதிவில், 100 வருட கோவிலை இடித்து இருக்கிறேன், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில் , லெட்சுமி கோவில் , பார்வதி கோவில் இருந்தது. இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன் என டி.ஆர்.பாலு பேசியது போல் காட்சி உள்ளது. இந்த வீடியோவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதனையடுத்து இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் வெறும் 40 நொடிகள் மட்டுமே அந்த வீடியோ இருப்பதாகவும் முழுமையான வீடியோ இது தான் என ஒரு வீடியோவை திமுகவினர் வெளியிட்டுள்ளனர்.
100 வருட மசூதியையும் இடித்துள்ளோம்
அதில், நான்கு வழிச்சாலை அமைக்கிற நேரத்தில் 100 வருட கோவில், கொல்கத்தாவில் 100 வருட மசூதியை இடித்து இருக்கேன். கோவிலை இடித்து இருக்கேன், மசூதியை இடித்து இருக்கேன், மாதா கோவிலை இடித்து இருக்கேன். வழியில் இருக்கும் வீடுகளை எல்லாம் இடிக்கும் போது மக்கள் வந்தாங்க, இதுகுறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு என்னை அழைத்து, இப்படி 100 வருட மசூதியை எல்லாம் இடித்தால் வாக்கு வங்கி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும். இதெல்லாம் சரியான முடிவா எனக் கேட்டார்.
இதைவிட சிறந்ததாக கோயில் கட்டிக்கொடுத்தேன்
அதற்கு நான் சொன்னேன், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில் , லெட்சுமி கோவில் , பார்வதி கோவில், இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன். எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஒட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு வேறு வழி கிடையாது. அவர்களுக்கு என்ன வேற கோவில் கட்டி தர வேண்டும்,
இதை விட சிறந்ததாக, 100, 200 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் செய்து தரேன்னு சொல்லி, அந்த இடத்தில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து விட்டு பக்கத்தில் கோவில் கட்டி கொடுத்தேன் என்று தான் டி.ஆர்.பாலு பேசியுள்ளதாக அந்த வீடியோவை வெளியிட்டு திமுகவினர் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்