நிதிச்சுமையைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லை என்கிற அடிப்படையில் மக்களுக்கு எதிரான திட்டங்களில் திமுக அரசு கவனம் செலுத்தாது என்று நம்புகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். தமிழகத்துக்கு ஏற்பட்ட நிதிச் சீரழிவால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன் தலையில் ஏறியிருக்கிறது என்று பகீர் தகவலை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையால் தமிழகத்தில் பேருந்து, மின்சாரம் கட்டணம் அதிகரிக்கப்படலாம், சொத்துவரி உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கைக்கு பல கட்சித் தலைவர்களும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஏழை எளிய நடுத்தர மக்களின் மீது வரிச்சுமையை சுமத்தாமல், பொருளாதாரத்தில் வலிமை அடைந்த முன்னேறிய பிரிவினர் வரி செலுத்தும் வகையில் தமிழக் அரசு பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்யும் என நம்புகிறேன். நிதிச்சுமையைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லை என்கிற அடிப்படையில் மக்களுக்கு எதிரான திட்டங்களில் திமுக அரசு கவனம் செலுத்தாது என்று நம்புகிறோம். குறிப்பாக, மதுக்கடைகளை நம்பி வருவாயை மேம்படுத்துவதற்கு திமுக அரசு திட்டங்களைத் தீட்டாது” என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்/

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred