திமுக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கருணாநிதி ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க உடன்பிறப்பாக கடைசி மூச்சுவரை திமுகவை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன். 

திமுக என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை, தன்னுடைய உயிரை ஈந்து தமிழ் மண்ணுக்கு நிரூபித்துள்ள தியாகச்சுடர் ஜெ.அன்பழகனுக்கு வீரவணக்கம் செலுத்தி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. கட்சி தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் வருமாறு:
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் தன் உடல்நிலையைவிட மக்களின் பசிப்பிணி நீக்குவதே முதன்மையானது என்கிற சீரிய பொதுநல சிந்தனையுடன், என்றென்றும் தலைமையின் வழிகாட்டுதலை சிறிதும் வழுவாமல் நிறைவேற்றுபவராகக் களப்பணியாற்றி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி மறைவெய்தி, திமுகவினர் அனைவரையும் கண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார்.