”ராம்நாத் கோவிந்த் நாட்டின் பன்முகத்தன்மையை காப்பார்” - ஸ்டாலின் நம்பிக்கை...
குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்டி நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பார் என்று நம்புவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான வாக்குப்பதிவு கடந்த 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது.
14-வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைதொடர்ந்து இன்று காலை சுமார் 11 மணி முதல் குடியரசு தலைவருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன.
இதில் ராம்நாத் கோவிந்த் 7,02, 044 வாக்குகளையும் எதிர்கட்சிகளின் மீராக்குமார் 3,35,330 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 14 ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்நாத் கோவிந்த் அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்டி நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.