புத்தாண்டு தினத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த்; தொண்டர்கள் மகிழ்ச்சி
புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்க உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அண்மையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கூட அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தொண்டர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இருப்பினும் புத்தாண்டு, கொடி நாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் விஜயகாந்த் தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.
அந்த வகையில், வருகின்ற புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் நாளில் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளாா். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற புத்தாண்டு தினத்தில் (01.01.2023) சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் விஜயகாந்த் வருகை தரவுள்ளாா்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கேப்டனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம். கழகத்தைச் சேர்ந்த அனைவரும், பொதுமக்களும் நேரில் வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வரவுள்ளார் என்ற செய்தி அறிந்து அவரது தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.