கொரோனா போரில் களமிறங்கிய கேப்டன்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பு...!
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக அனைவரும் தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கினர்.
இன்று காலை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா தன்னுடைய கணவர் விசாகனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் கேட்ட மறுகணமே பல்வேறு தரப்பிலும் உதவிகள் குவிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தமிழக அரசு கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றினால் தன்னுடைய செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தை வெல்லவும் தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.