Divakaran Supporters ready for conflict Dinakaran
திகார் சிறையில் இருந்து வெளிவந்த தினகரன், மீண்டும் கட்சி பணியை தொடரப்போவதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
இது, திவாகரன் ஆதரவாளர்கள் மற்றும் தினகரனை அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்த அமைச்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், ஜாமினில் வெளிவந்துள்ளார். அவரை, கரூர் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ க்கள் வரவேற்றனர்.
பின்னர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார். தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றும், அப்படி நீக்கும் உரிமை பொது செயலாளருக்கு மட்டுமே உண்டு என்றும் தெரிவித்தார்.
தினகரன் சிறை சென்றதையடுத்து, திவாகரனை அரசியலில் முன்னிலை படுத்தும் முயற்சி மன்னார்குடி குடும்ப உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை திகார் சிறையில் தினகரனை சந்தித்த நடராஜன், அவருடன் நீண்ட நேரம் பேசி சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

பின்னர், டெல்டா மாவட்ட முக்கிய அமைச்சர் ஒருவர் மூலம், இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனின் தலையீடு இருக்காது என்று முதல்வரிடமும் சொல்லி இருக்கிறார்.
அத்துடன், ஜாமினில் வெளிவந்த தினகரனை நாங்கள் சந்திக்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்தார். அதேபோல், தினகரன் அரசியலில் ஈடுபடுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையனும் கூறினார்.
ஆனாலும், தினகரனின் ஆதரவாளர்கள், அவருக்கு கொடுத்த உற்சாக வரவேற்பு, மன்னார்குடி குடும்ப உறவுகள் எடுத்த முடிவை தவிடு பொடியாக்கி உள்ளது.
மேலும், இன்று மாலை சென்னை வரும் தினகரன், நேராக அதிமுக தலைமை அலுவகத்திற்கு வருவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, மன்னார்குடி குடும்ப உறவுகள் எடுத்த முடிவுக்கு தினகரன் கட்டுப்படவில்லை என்றே தெரிகிறது.
இதனால், தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கியதாக அறிவித்த அமைச்சர்கள், திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் கடும் கொதிப்பில் உள்ளனர்.
ஒருவேளை, தினகரன் அதிமுக அலுவலகத்திற்கு வந்தால், அங்கு தினகரன் மற்றும் திவாகரன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் உண்டாகவும் வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
என்ன நடக்க போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
