- Home
- Tamil Nadu News
- TN Politics: திமுக-அதிமுக கூட்டணி பேச்சு.. பின்னணியில் அவரா? திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்!
TN Politics: திமுக-அதிமுக கூட்டணி பேச்சு.. பின்னணியில் அவரா? திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்!
TN Politics: 'திமுக-அதிமுக கூட்டணி பேச்சு நடந்தது என எனக்கும் தகவல் கிட்டியது' என திருமாவளவன் சொன்னது மூலம் இரு பெரும் திராவிட கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது அம்பலமாகியுள்ளது.

தவெக ஆட்சி; முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை உதவியுடன் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தவெக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதற்கு முன்பாக, தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராதவிதமாக பரம எதிரிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளதகாவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் முதலில் தகவல் பரவியது.
திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
பின்பு திமுகவும், அதிமுகவும் கைகோர்த்து விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக அமர்த்த முடிவு செய்து இருந்ததாகவும் தகவல்கள் கூறின. திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பேபியும் தெரிவித்து இருந்தார். இதேபோல் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்களும் இந்த கருத்தை தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம், 'இபிஎஸ் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்வராக முயன்றார்' என்று இன்று காலை அதிரடியாக தெரிவித்து இருந்தார்.

திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்
இந்த நிலையில், தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக, அதிமுக கூட்டணி அமைத்து உங்களை முதல்வராக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருமாவளவன், ''அதிமுக, திமுக மற்றும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் அந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிட்டியது. நாங்கள் இடதுசாரிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையை முன்வைத்து எங்கள் உயர்நிலைக்குழுவில் விவாதித்து அதன்பின்பு தான் முடிவெடுத்தோம்.
எல்லோரும் அது தாமதமான முடிவு என்று விமர்சிக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறவர்க்கு தான் முடிவெடுப்பதில் உள்ள சிரமம் புரியும். உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவை எடுக்க முடியாது. தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளோம். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையும் அப்படியே தான் உள்ளது'' என்று தெரிவித்தார்.
திமுக, அதிமுக பிளானையே மாற்றிய காங்கிரஸ்
'திமுக-அதிமுக கூட்டணி பேச்சு நடந்தது என எனக்கும் தகவல் கிட்டியது' என திருமாவளவன் சொன்னது மூலம் இரு பெரும் திராவிட கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது அம்பலமாகியுள்ளது. திமுக, அதிமுக இணைந்தாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவு கொடுத்ததால் தான் அவர்கள் ஆட்சி அமைக்க முடியும். அதன்படி கூட்டணி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த காங்கிரஸின் டெல்லி தலைமை திருமாவளவன், இடதுசாரிகள் ஆகியோரிடம் பேசி தவெகவுக்கு ஆதரவு கொடுக்க செய்து, திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை உடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக, அதிமுக கூட்டணிக்கு ரஜினி தூதுவரா?
ஏற்கெனவே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தல் முடிவுக்கு பிறகு மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனால் பாஜக உத்தரவின்பேரில் திமுக, அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலினிடம் ரஜினி பேசியதாக செய்திகள் காட்டுதீயாக பரவின. முதலில் திமுக, அதிமுக கூட்டணி வதந்தி என பலர் சொன்னாலும், திருமாவளவன், சி.வி.சண்முகம் ஆகியோரின் பேச்சுகள் இதனை உண்மை என இப்போது உணர்த்தியுள்ளன. இதேபோல் திமுக, அதிமுக கூட்டணி விவகாரத்தில் ரஜினி தூதுவராக செயல்பட்டார் எனவும் பலரும் சமூகவலைத்தளங்களில் கூறினர். இந்த செய்தி உண்மையா? இல்லையா? என்பது காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

