தேர்தல் கமிஷன் பிராக்டிகலா சிந்திக்கிறதே இல்ல !! யார் அவங்களுக்கு அட்வைஸ் பண்ணுறது ? .கொந்தளிக்கும் திண்டுக்கல் சீனிவாசன் !!!
வாக்காளர்கள் வேலைக்குச் சென்றிருக்கும் நேரமான காலை 9 மணி முதல் 5 வரை மட்டும்தான் பிரச்சாரம் செய்யணும்னு தேர்தல் கமிஷனுக்கு யார் அட்வைஸ் பண்ணுவாங்க என கேள்வி எழுப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிராக்டிகலா அதிகாரிகள் சிந்திக்கணும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. 2 அணிகளின் இணைப்புக்கு பிறகு மேல்மட்டத்தில் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்தாலும் கீழ் மட்டத்தில் 2 அணிகளாகத்தான் செயல்படுகின்றனர் என ஒரு குண்டு போட்டார்.
ஆனால் மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்தான் சமரசம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என கூறினார்.
டி.டி.வி.தினகரன் முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தோம். வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை மூலம், சசிகலா குடும்பத்தினர் கட்சிக்கு செய்த துரோகம் தெரியவந்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்..
அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் அணியினர் கட்சிக்கு திரும்பி வந்தால் வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த நேரத்தில் தான் மக்கள் வேலைகளுக்கு செல்வார்கள். பின்னர் எப்படி அவர்களை சந்தித்து வாக்கு கேட்பது என கேள்வி எழுப்பிய திண்டுக்கல் சீனிவாசன் , தேர்தல் கமிஷன் பிராக்டிகலா சிந்திக்கணும் என ஐடியா கொடுத்தார்.
மேலும் தேர்தல் கமிஷனுக்கு இந்த ஐடியாவை யார் கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார். ஆனாலும் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.