இந்த இரண்டு பேரும் அரசியலுக்கு வர தகுதி இல்லாதவர்கள்.... தினகரனுக்கு தான் அதிமுக! யார் சொன்னது தெரியுமா?
கும்பகோணத்தில் நேற்று நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விரைவில் அதிமுகவை தினகரன் கைப்பற்றுவார், ரஜினி கமலுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இதன் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா கும்பகோணத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட டிராபிக் ராமசாமி தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து பேசினார். தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். தினகரன் தன்னம்பிக்கையும் தைரியமும் உடையவர். அவர் விரைவில் அதிமுகவைக் கைப்பற்றுவார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், புதியதாக ஆன்மீக அரசியல் தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த் அடுத்தவாரம் கட்சி தொடங்கும் கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு, மக்கள் எப்போதுமே ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். இந்த இவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இரண்டுபேருமே விளம்பரப்பிரியர்கள். இரண்டு பேரும் அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள்.
மேலும், தமிழக சட்டமன்ற சபாநாயகராக உள்ள தனபால், அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர். அவசரப்பட்டு, அவர் 18 எம் எல் ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிட்டார். இது செல்லாது” என்று கூறினார்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் முறையை மாற்ற வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக வேட்பாளர்களைக் குறிப்பிட எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டுவரலாம் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனை கூறினார். இது தொடர்பாக, தேர்தல் ஆணையர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும், சின்னத்தை மக்கள் மனதில் பதியவைத்து வாக்கு பெறுவதால், நல்லவர்கள் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை என பேசினார் டிராபிக் ராமசாமி.