வேட்பாளர் பிரச்சாரத்தை விட கட்சிக்காரர்கள் களப்பணியே முக்கியம்: தினகரன் சொன்ன தேர்தல் ரகசியம்!
வீதியில் நின்று காட்டு கத்தலாய் கத்தி வேட்பாளர் ஒட்டு கேட்பதை விட, கட்சிக்காரர்கள் ஆற்றும் களப்பணியில்தான் வெற்றி கிடைக்கும் என்று தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், கொளுத்தும் வெயிலில் மாலை 5 மணிவரை மக்கள் வெளியில் தலை காட்டவே அஞ்சுகின்றனர்.
தொழிலாளர்கள் நிறைந்த ஆர்.கே.நகரில் காலையில் அனைவரும் வேலைக்கு போய்விடுவார்கள், வீட்டில் இருக்கும் யாரும் மதிய வெயிலில் வெளி வருவதே இல்லை.
அதனால், காலையிலும், மதியத்திலும் பிரச்சாரம் செய்வது வீண். மாலை 5 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதே பலன் தரும் என்று தினகரன், கட்சிக்காரர்களிடம் கூறி வருகிறார்.
மேலும், வேட்பாளர் வீதியில் நின்று ஒட்டு கேட்டு கத்துவதை விட, கட்சிக்காரர்கள் களத்தில் இறங்கி வீடுதோறும் சென்று வாக்கு சேகரிப்பதே வெற்றி தரும் என்றும் கூறியுள்ளார்.
அம்மாவே, அந்த உத்தியைத்தான் கையாள்வார் என்று கூறிய தினகரன், கட்சிக்காரர்கள் களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவரும், மாலை 5 மணி வாக்கில்தான் பிரச்சாரத்திற்கு செல்கிறார். திமுக வேட்பாளர் காலையில் இருந்தே பிரச்சாரத்தில் ஈடுபடுவது பலன் தராது என்றும் தினகரன் கூறுகிறார்.
அண்ணன் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே செய்வோம் என்று அதிமுகவினரும் கால நேரம் பார்க்காமல் வீடுதோறும் சென்று களப்பணி ஆற்றி வருகின்றனர்.