கைத்தட்ட சொன்னீங்களே.. கொடுத்த வாக்கை காப்பாத்துனீங்களா..? பொளந்துகட்டும் ஈஸ்வரன்..!
பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இரவு பகலாக உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் கொரோனா அலை கடந்த ஆண்டு பரவியபோது மருத்துவர்களும் செவிலியர்களும் உயிர் காக்கும் கடவுள்களாக போற்றப்பட்டார்கள், வணங்கப்பட்டார்கள். பலரும் தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து மரியாதை செய்தார்கள். பிரதமர் மோடி அவர்களுக்காக நாட்டு மக்கள் அனைவரையுமே பாராட்டி கைதட்ட சொன்னார். மாநில அரசுகளும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்கள். சிறப்பு ஊதியமும், காப்பீட்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
ஆனால் கொரோனா முதல் பரவல் குறைய ஆரம்பித்த உடன் மருத்துவத் துறைக்கான வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட எதையும் அரசாங்கங்கள் வழங்கவில்லை. அதனால், மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள். தங்களுக்கும் நோய் தொற்று பரவும் என்பதை அறிந்தும், தங்கள் மூலமாக தங்கள் குடும்பங்களுக்கும் பரவும் என்பதை தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இரவு பகலாக உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள்.
இரண்டாவது கொரோனா பரவல் இவ்வளவு தீவிரமாக இருக்குமென்று அறியாத மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது தடுமாறி கொண்டிருக்கின்ற நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒத்துழைப்பும் முன்புபோல இல்லை என்ற செய்தியும் வேதனையளிக்கிறது. மருத்துவர்களையும் செவிலியர்களையும் முழுவீச்சில் களமிறக்காமல் கொரோனா பரவலில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடனடியாக மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு உறுதிமொழி அளித்ததை அரசுகள் நிறைவேற்ற வேண்டும். மருத்துவர்களுடைய ஆதங்கங்களையும், கள உண்மைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுகின்ற நம் கடமையை செய்திருக்கின்றோம். தவறு எங்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.” என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.