அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியுள்ளார் என்றும் "சாவடிங்கடா" என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் தள்ளி வைத்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியாகி, அதனடிப்படையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் லைவாக காட்டிய நிலையில் அந்த வீடீயோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஜெயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அ.தி.மு.க-வினர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தி.மு.க பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் நேற்று முன்தினம் இரவு மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணாஆனந்த் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது வழக்கில் அவரை கைது காட்டுவதற்காக பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை கைது காட்ட போலீசார் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னை ஜார்ஸ் டவுன் நீதிமன்றத்தில் 15வது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால் 16-வது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்துள்ள முடியாது என கூறினார். அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பொறுப்பாக பணியாற்றி வரும் நீதிபதி தவுலத்தம்மாளிடம் 16-வது மாஜிஸ்திரேட் தயாளனே விசாரிக்க அனுமதி வழங்க கோரி ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் அனுமதி கேட்கபட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக சென்னை ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டு ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில் மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயக்குமார் தரப்பில் ஆஜரானஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஜெயக்குமார் மீது அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் வழக்கு பதியபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும் எனவும், புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடவில்லை என வாதிட்டார். பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பபார்கள். அந்த வகையில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். 

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியுள்ளார் என்றும் "சாவடிங்கடா" என்று கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்சியாகும் என்பதால் தான் இந்த வழக்கை 307ஆக மாற்றியுள்ளதாகவும், தகவல்தொழில் நுட்ப பிரிவு வழக்கும் ஜெயக்குமார் மீது சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை எனவும், அதற்கான முகாந்திரம்மும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார். எதன் அடிப்படையில் 506 (2) பிரிவை சேர்த்தார்கள்? கொலை மிரட்டலே இல்லை என்றபோது கொலை முயற்சி எப்படி வரும் என்று ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிட்டார். அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி தீர்பை தள்ளிவைத்தார்.