"கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவையே காலி செய்து விட்டார்கள். வேலையில் இருந்த பலரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். காலி பணியிடங்களையும் நிரப்பவில்லை. அதையெல்லாம் செய்யாமலேயே சென்று விட்டனர்."

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்மாயை தூர்வாரினாரா அல்லது கஜானாவை தூர்வாரினாரா எனத் தெரியவில்லை என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பரமக்குடியில் அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவையே காலி செய்து விட்டார்கள். வேலையில் இருந்த பலரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். காலி பணியிடங்களையும் நிரப்பவில்லை. அதையெல்லாம் செய்யாமலேயே சென்று விட்டனர். தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் கடனை அதிமுக அரசு வாங்கி வைத்துள்ளது. இதையெல்லாம் சமாளித்துதான் தமிழக முதல்வர் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசையும் சிறப்பாக வழிநடத்துகிறார்” என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டதால்தான் தற்போது கண்மாய்கள் நிரம்பி உள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் பெரிய கருப்பன், “அவர் (எடப்பாடி பழனிச்சாமி) கண்மாயை தூர்வாரினாரா அல்லது கஜானாவை தூர் வாரினாரா? எனத் தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.

பின்னர் அவரிடம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பெரிய கருப்பன், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சிக்கு சான்றாக திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதுபோலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை தமிழக முதல்வர் தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்” என்று பெரிய கருப்பன் தெரிவித்தார்.