பதவி ராஜினாமா செய்தி... டிடிவி தினகரன் மறுப்பு!
டிடிவி தினகரன் தனது துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வந்த தகவல் உண்மை இல்லை என தினகரனின் உதவியாளர் ஜனா கூறியுள்ளார்.
நேற்று பரப்பன அக்ராஹாராவில் உள்ள சசிகலாவை சந்தித்த குடும்பத்தினர். தினகரனுக்கு எதிராகவே பேசினார்களாம். செந்தில் பாலாஜி திமுகவிற்கு போனது, இன்னும் சில நிர்வாகிகள் அதிமுக திமுகவிற்கு போனதற்கு காரணம் தினகரன் தான் என சொன்னார்களாம்.
இந்த சந்திப்பின் முக்கிய விஷயமாக தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சொன்னதால் தினகரனும் தம்மை நீக்கும் முன் தனது துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வந்தது.
இந்த செய்தியை உறுதிப்படுத்த ஏசியாநெட் இணையதளம், டிடிவி தினகரனின் உதவியாளர் ஜனாவை தொடர்பு கொண்டது. இந்த ராஜினா செய்தி குறித்து பேசிய ஜனா, கடந்த சில நாட்களாகவே இப்படியான வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் பொய்யான செய்தி, அமமுக கட்சியானது, சின்னம்மா ஆணைக்கிணங்க, மக்கள் செல்வர் டிடிவி தினகரன் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம், இந்த சாம்ராஜ்யத்தில் தூண்களாக விளங்கும் தொண்டர்களின் மனநிலையை இது போன்ற வதந்திகளால் சிதைக்க முயல்பவர்கள் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என கூறினார்.