நாடாளுமன்றத்தை எப்படி நடத்துறீங்கன்னு பார்க்கலாம்…. கொந்தளிக்கும் அதிமுக எம்.பி.க்கள் !!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க- திமு.க உள்ளிட்ட எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக எம்.பி-க்கள் வேணுகோபால், குமார், அரி, அருண்மொழிதேவன், சத்தியபாமா உள்ளிட்டோர் நோட்டீசை அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூ. எம்.பி-க்கள் இணைந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, உணர்வின் அடிப்படையில் அதிமுக, திமுக எம்பிக்கள் இணைந்து காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.
தி.மு.க எங்களுடன் இணைந்து போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமுயும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியும் அமையும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்..
அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை, அதிகாரிகள் மட்டத்தில்தான் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சர்கள் மட்டத்தில் அழைப்பு இல்லை என்றும் தம்பிதுரை குற்றம்சாட்டினார்..