2ஜி மேல்முறையீட்டை விரைவாக விசாரிக்க கோரும் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரும் மனுக்கள் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
நாட்டை அதிர்ச்சிக்குள்ளக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு கடந்த 2010-ம் ஆண்டுல் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து கடந்த 2017-ம் ஆண்டு விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரித்து நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஐயும் அமலாக்கத்துறையும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதால், விரைந்து விசாரிக்க இரு அமைப்புகளும் கோரின. சிபிஐ, அமலாக்கத் துறையின் இந்த கோரிக்கைக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த வழக்கில் இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.