"இரட்டை இலையை மீட்பதே நோக்கம்": புது கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எனது நோக்கம் என்று புதிதாக கட்சித் தொடங்கவுள்ள தீபா கணவர் மாதவன் கூறியுள்ளார்.
தீபாவின் கணவர் மாதவன் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் தான் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், ‘தற்போது அதிமுகவில் தலைமை இல்லை. புரட்சித்தலைவி அம்மா உயிரோடு இருந்தவரை அவர் வலுவான தலைவராக செயல்பட்டார்.
ஆனால், தற்போது உள்ள தலைவர்கள் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சண்டையிட்டுக் கொள்கின்றனர். தொண்டர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை.
தற்போது தொடங்கவுள்ள கட்சிக்கு, நான் தான் பொதுச் செயலாளர். தலைவர் மற்றும் நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள். கட்சியின் கொள்கை மாநாட்டின் போது அறிவிக்கப்படும்.
அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதே எனது நோக்கம். புரட்சித் தலைவி அம்மா வழியில் கட்சியை நடத்த வேண்டும். அம்மா வழியே என் வழி.
தீபா தொடங்கியுள்ள பேரவைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நான் செய்தியாளர்களை முதன்முறையாக சந்தித்ததில் இருந்தே கூறி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.