டிடிவி அணியை விட்டு வெளியேற நெருக்கடி - புலம்பி தவிக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்...
டிடிவி தினகரன் அணியிலிருந்து வெளியேற தனக்கும், செந்தில்பாலாஜிக்கும் நெருக்கடி கொடுப்பதாக டிடிவி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடிக்கு எதிராக பெரும்பாலான எம்.எல்.ஏக்களை கொண்ட செந்தில் பாலாஜி தலைமையில் ஒரு அணி திரண்டது. அதில் எம்.எல்.ஏவாக இருந்த பழனியப்பனும் ஒருவர்.
இவர்கள் எடப்பாடியிடம் டிடிவிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் எடப்பாடி இவர்களின் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிகிறது.
இதையடுத்து டிடிவி தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைதொடர்ந்து டிடிவி தரப்பில் இருந்த எம்.எல்.ஏக்களை எடப்பாடி அதிரடியாக நீக்க வழி வகை செய்தார்.
இதைதொடர்ந்து அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் சிபிஐ அலுவகத்தில் அவர் ஆஜராகவில்லை.
இதனால் போலீஸ் பிடிவாரண்ட் வரை சென்று முன் ஜாமின் பெற்றார் பழனியப்பன். இதேபோல் தற்போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பணம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் அணியிலிருந்து வெளியேற தனக்கும், செந்தில்பாலாஜிக்கும் நெருக்கடி கொடுப்பதாக டிடிவி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் உண்மையான தொண்டர்களைக் கொண்ட அதிமுகவின் பக்கம் இருப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
என் மேல் போடப்பட்டுள்ள வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என பழனியப்பன் தெரிவித்துள்ளார்.