d.rajender meet to journalist to speech against vishal
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக இயக்குனர்கள் பாரதிராஜா, டி. ராஜேந்தர், நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது டி. ராஜேந்தர் கூறியதாவது,
நான் இங்கு வந்ததற்கு காரணம் என்னை வாழ வைத்தது எனக்கு சோறு போட்டது சினிமா. அரசியல் எல்லாம் அப்புறம். சினிமா தான் என் தெய்வம். பிரச்சனையை பேச எவனும் வர மாட்டான். பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று சிலர் தான் பேசுகிறான்.

புலி பதுங்கலாம், ஒதுங்கியிருக்கக் கூடாது. அப்படி ஒதுங்கியதால் தான் இன்று யார், யாரோ நாட்டாமைக்கு வந்துள்ளார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.நான், நண்பர் சேகர் என ஏராளமானோர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டோம். அந்த கூட்டத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து கூட நிற்காத கொடுமை நடந்தது.
பொதுக் குழுவில் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. பொதுக்குழுவை தேசிய கீதம் பாடி நீங்களாக முடித்தது நியாயமா? கேள்வி கேட்க வந்த ராதாகிருஷ்ணனை அடிக்கப் போனது நியாயமா?. வைப்பு நிதி ரூ. 7 கோடி இருந்தது. அது எங்கே போனது? தெம்பு இருக்கா உனக்கு, வந்து காட்டு கணக்கு.

ரூ. 7 கோடியை சுரண்டியுள்ளீர்கள். வீடியோ பைரசியை கண்டுபிடிக்க துப்பறிவாளன் படம் எடுத்தால் மட்டும் போதுமா? நீ என்ன பெரிய துப்பறிவாளனா? கண்டுபுடுச்சியா, உனக்கு இருக்கா துப்பு? யார் அந்த தமிழ் ராக்கர்ஸ்? கண்டுபிடிப்பேன் என்று சொன்னியே, மார் தட்டினாயே. இப்போ எதுக்கு லைக்காவுடன் வச்சிருக்க கூட்டு என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார் டி.ராஜேந்தர்
பொதுக்குழுவையே உன்னால் நடத்த முடியலை, யாரைக் கேட்டு ஸ்டிரைக் நடத்தின. க்யூப் பணத்தை குறைப்பேன்னு சொன்னியே, குறைச்சியா? எந்த படமும் 200 தியேட்டருக்கு மேல் ரிலீஸாகக் கூடாது என்று சட்டம் போட்டுவிட்டு உன் படத்தை மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது. இது என்ன சட்டம்.
சங்கத்தில் அரசியல் வரக்கூடாது. நீ நடிகர் சங்கத்தில் நுழைந்தாய், தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகி ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தாய் அதை சேகர் தட்டிக் கேட்டது தப்பா?. ஆம்பளன்னு படத்தில் மட்டும் நடிச்சா போதாது என்றார் டி. ராஜேந்தர்.
