நினைவிழப்பதற்கு முன் சிவப்பு துணியால் தன் உடலை போர்த்த சொன்ன தா.பாண்டியன்.. உணர்ச்சி மேலிடும் தோழர்கள்.
தளராத உறுதியோடு உற்சாகப்படுத்தினார். எந்த கூட்டத்திற்கு போனாலும் மக்களின் எண்ணிக்கைகளை பார்க்காமல்; எண்ணங்களை எண்ணிப் பார்த்து முழுமையாக பேசிவிட்டு செல்வார்.
படைகருவியாய் சுழன்றடித்த போராளியை இழந்திருக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு குறித்து மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஃபாஸிசத்திற்கு எதிரான பீரங்கியாகவும் வலம் வந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். நேற்று மதியம் அவரது உயிர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, தகவலறிந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம்.அவர் நினைவிழப்பதற்கு சற்று முன்பு, சிவப்பு துணியால் அவரது உடலை போர்த்த சொன்னதாக தோழர்கள் உணர்ச்சி மேலிட கூறினார்கள்.அவர் கொள்கையில் உறுதியும், குருதியில் போர் குணமும் கொண்ட அரசியலாளர் என்பதை உயிர் ஊசலாடும் நேரத்திலும் நிருபித்திருக்கிறார்.
சமீபத்தில் மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அவரது கர்ஜனை உரை அதிகார வர்க்கத்தின் கதவுகளை உடைக்கும் விதத்தில் இருந்ததாக அனைவரும் பாராட்டுகின்றனர். தோழர் தா.பா. என தமிழக அரசியலில் கொண்டாடப்பட்ட அவரது பொது வாழ்வு போர்க்களங்கள் நிரம்பியதாகவே சிறப்பு பெறுகிறது.மனிதநேய ஜனநாயக கட்சியின் பல மேடைகளில் ஏறி; அரிய பல கருத்துகளை கூறி; அவர் ஆற்றிய உரைகள் எமது நினைவுகளை உசுப்புகின்றன. கடைசியாக கடந்தாண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் அவரை சந்தித்து பேசினேன். தளராத உறுதியோடு உற்சாகப்படுத்தினார்.
எந்த கூட்டத்திற்கு போனாலும் மக்களின் எண்ணிக்கைகளை பார்க்காமல்; எண்ணங்களை எண்ணிப் பார்த்து முழுமையாக பேசிவிட்டு செல்வார். செம்படை சாம்ராஜ்யத்தில் நிலை குலையாத தலைவர்களில் ஒருவராக வலம் வந்த அவரது நாடாளுமன்ற உரைகளும், அவர் எழுதிய நூல்களும் எதிர்கால தலைமுறைகளுக்கான ஆவணங்கள் ஆகும். தமிழகம் ஆளுமை மிக்க ஒரு போராட்ட தலைவரை இழந்திருக்கிறது என்ற வருத்தம் எம்மை வாட்டுகிறது. இதயமுள்ள இயந்திரமாய்; எளிய மக்களின் படை கருவியாய்; தொழிலாளர் வர்க்கத்தின் தோழராய்; வலம் வந்த சிவப்பு போராளியை இழந்து தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.