கரன்ஸி எண்ணியவர்கள் எல்லாம் இனி கம்பி எண்ணுவாங்க !! விழுப்புரம் மாநாட்டில் கொந்தளித்த ஸ்டாலின் !!
அமைச்சர் வீட்டில் ரெய்டு, இபிஎஸ், ஓபிஎஸ் உறவினர் வீடுகளில்இ ஏன் டிஜிபி வீட்டில் கூட ரெய்டு என தமிழகத்தை கேவலப்படுத்திய இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என பேசிய ஸ்டாலின், இது வரை கரன்ஸியை எண்ணிய அதிமுக அமைச்சர்கள் இனி கம்பி எண்ணுவார்கள் என அதிரடியாக தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழுப்புரத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது இந்த விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், கொள்ளையடிப்பதுதான் லட்சியம் என வாழ்ந்து வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
ஊழல் செய்வதே அன்றாட பணி. நாளொரு ஊழல், பொழுதொரு ஊழல். குட்கா, முட்டை, ஸ்மார்ட் சிட்டி ஊழல், வாக்கி டாக்கி ஊழல். நடந்தால் ஊழல், நின்றால் ஊழல், படுத்தால் ஊழல். முதலமைச்சர்கள், , துணை முதலலமைச்சர் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களில் வீடுகளில் ரெய்டு. ஏன் அமைச்சர் வீட்டில் ரெய்டு. அதனைவிட தலைமை செயலர், வெட்கக்கேடாக டி.ஜி.பி. வீட்டில் ரெய்டு நடக்கிறது என குறிப்பிட்டார்.
ஊழல்களில் திளைத்து நிற்கும் அமைச்சகர்கள் விரைவில் எல்லோரும் சிக்க போகிறார்கள். கரன்சி எண்ணியவர்கள் எல்லாம் கம்பி எண்ணுவார்கள் என தெரிவித்தார்.
தேர்தலுக்கு நாம் தயாராகி விட்டோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் என அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். ஊழல் ஆட்சி ஒழியட்டும். தி.மு.க. ஆட்சி மலரட்டும் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்..