அமைச்சர் விழாவை புறக்கணித்த கடலூர் மாவட்ட எம்.பி,எம்எல்ஏக்கள் - முற்றுகிறது மோதல்!!
கடலுாரில் அமைச்சர் சம்பத் தன்னிச்சையாக செயல்படுவதாக, அந்த மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.க்கள் புகார் அளித்த நிலையில் அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மோதல் முற்றி வருகிறது.
அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களை மதிப்பதில்லை என்றும் அவர் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு மக்கள பிரதிநிதிகளை அழைப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனை காரணமாக கடலூர் மாவட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏக்களும், தொடர்ந்து பல மாதங்களாக அமைச்சர் சம்பத் கலந்து கொள்ளும் விழாக்களை புறக்கணித்து வந்தனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் சத்யா பன்னீர்செல்வம், கலைச்செல்வன் ஆகியோருடன் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சர் சம்பத் பங்கேற்கும் விழாவை கடலுார் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்த நிலையில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இன்று கடலூரில் அமைச்சர் சம்பத் கலந்து கொண்ட விழாவை எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன், சத்யா ஆகியோர் புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து இவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் மக்கள் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.