பொதுக்கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதைப் பார்த்து திமுக அரசு தங்களுடைய ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை தற்காலிகமாக ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று வருகிறார். நேற்று இரவு நாமக்கல்லில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசினார். “மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் 45 நாட்களை கடந்தும் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதைப் பார்த்து திமுக அரசு தங்களுடைய ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை தற்காலிகமாக ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். 

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக 517 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் 15 வாக்குறுதிகளைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. கேட்டால் மத்திய அரசு நிதி வழங்காமல் ஓரவஞ்சனை செய்கிறது என சொல்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த நான்காண்டு காலமும் வேகமாக முடிய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுவதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன். மத்திய அரசு சார்பில் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக அமைச்சர்கள் போகமாட்டார்கள். ஆனால், கூட்டம் முடிந்த பிறகு மத்திய அரசிடம் இருந்து வரும் குறிப்பை எப்படி மாநில அரசு திட்டமாக மாற்றலாம் என்று ஆலோசனை செய்வார்கள். 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 13 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஒரு முதல்வர்க்கூட பதில் கடிதம் எழுதவில்லை. தமிழகத்தில் உள்ள பாதி மருத்துவக் கல்லூரிகள் திமுக அமைச்சர்களின் மனைவி பெயரில்தான் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பழைய சேகர் பாபுவை பார்க்காதீர்கள் எனக் கூறுகிறார். அதைப் பார்க்கத்தான் பாஜக உள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஜி ஸ்கொயர் தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கிறார். அவருடைய அனுபவத்துக்கு இது அழகில்லை. அவரை இனி ஜி ஸ்கொயர் முத்துசாமி என்றே அழைக்கலாம். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஜூலை முதல் வாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். முதல் ஆளாக நான் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன். மாநில டிஜிபிக்கு தைரியம் இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளர்.