தொட்டால் விழும் கட்டிடம்.. ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை.. திமுக எம்எல்ஏவுக்கு உறுதி கொடுத்த அமைச்சர்.!
கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறது. கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. இதேபோல், புளியந்தோப்பு கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமானப் பணியில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தால் ஒப்பந்தாரர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கேபி பார்க் குடியிருப்பு கட்டிடம் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் கட்டிடத்தின் சுவர்கள், லிப்ட், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதிலமடைந்து மோசமாக இருப்பதாக அங்குக் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றபோது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “தொட்டால் சிணுங்கி போல் தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக கட்டியுள்ளது. புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது. கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறது. கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. இதேபோல், புளியந்தோப்பு கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன், ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இது. கட்டுமானப் பணியில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தால் ஒப்பந்தாரர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பன்னடுக்கு கட்டடம் தொடர்பாக யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் வேடிக்கை பார்க்கமாட்டார் என்று பதிலளித்தார்.