கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக, எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு, பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டுள்ள போக்கு அனுமதிக்க முடியாததாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக வேட்பாளர்களே போட்டியாக நின்று வெற்றி பெற்றனர். இச்சம்பவம் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ள கட்சிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணிக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட திமுக வேட்பாளர் போட்டியாக நின்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸடாலின் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒரு சில இடங்களில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக எதிர் அணியினர் பலனடைந்ததையும் பார்த்தோம்.

இப்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்காக மறைமுக தேர்தல்கள் நடந்துள்ளன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே பேசி உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த உடன்பாடு பெரும்பாலும் அமலாகவில்லை. திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கியதுடன் பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளனர். 

இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், இதர கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் இடங்கள் அனைத்திலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக, எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு, பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டுள்ள போக்கு அனுமதிக்க முடியாததாகும். பதவி வெறியில் சிலர் ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான அரசியலின் வெளிப்பாடு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

தற்போது இதுக்குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறதுஉதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.