கொரோனா பாதிப்பால் அதிமுக முன்னாள் அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு... ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்...!
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உயிரிழந்தார்.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பா.வெ.தாமோதரன் (71). அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2001-2006ல் பொங்கலூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பின்னர், ஜெயலலிதா அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்தார்.
கடந்த டிசம்பர் 15-ம் தேதி உடல்நலக் குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நுரையீரல் பாதிப்பினால் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த மாதம் அவினாசி ரோடு மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இதுவே, அவர் கடைசியாக பங்கேற்ற விழா ஆகும். மறைந்த தாமோதரனுக்கு விஜயம் என்ற மனைவியும், கவிதா, ராதிகா என்ற 2 மகள்களும் உள்ளனர். இவரது ஒரே மகன், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.