திருச்சியில் திமுக கட்சி அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். 

திருவெறும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர் உள்பட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவாகரத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகவும், தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திருச்சி முன்னாள் எம்.பி.யும், திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் தமிழக ஆளுநருக்கு புகார் மனு அனுப்பினார்.
இந்நிலையில் இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்து அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா பேரிடரைச் சமாளிக்க உதவக் கோரி, திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்க நிர்வாகிகளுடன் என் அலுவலகத்தில் நேற்று உரையாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்ற என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் என் அலுவலகத்துக்கு வந்தனர்.
கொரோனா காலத்தில் மக்களின் உயிரைக் காக்கும் வகையில் சேவை மனப்பான்மை உள்ள ஒற்றைக் கருத்துள்ள நபர்கள் சந்திக்கும் ஆலோசனைக் கூட்டம் என்பதால், அதிகாரிகள் அதில் பங்கேற்று சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மற்றபடி, அந்தக் கூட்டம் திட்டமிட்டு அதிகாரிகளை வரவழைத்து நடத்தப்பட்ட கூட்டம் அல்ல. அரசு ஊழியர் என்ற முறையில், கட்சி அலுவலகத்தில் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே, சில பத்திரிகைளில் வந்த செய்திபோல், முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் அல்ல” என்று அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred